1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

மகரம்: பங்குனி மாத ராசி பலன்கள்

கர்மகாரகன் சனியை அதிபதியாகக் கொண்ட மகர ராசி இந்த மாதம் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி  உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.


அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான  பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் மனதில் சிலரது போக்கினால் வருத்தங்கள் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. சுதந்திரமாகச் சிந்தித்துத் தனித்துச் செயல்படுவீர்கள். உங்களைவிட்டு  எதிரிகள் விலகுவார்கள்; புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள். 
 
தொழில் செய்பவர்கள் போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக  உழைப்பீர்கள். 
 
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து  நட்பு பாராட்டுவார்கள். 
 
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து  கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். 
 
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான  சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.
 
பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை  எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். 
 
மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.  நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். 
 
பரிகாரம்: தினமும் நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வணங்கி வர மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.  
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 29, 30.